முகப்பு

B.மணிகண்டன் சிவம்

பிள்ளையார் சுழி என்பது அகரம், உகரம், மகரம், (அ,உ,ம்) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள நாதப் பிரமமாகிய ‘ஓம்’ என்னும் பிரணவத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம், கோடு சிவலிங்கம் என்றும் சொல்லப் படும் எழுதத் தொடங்கும்முன் பிள்ளையார் சுழியை எழுதுவது, எழுத மேற்கொள்ளும் செயல் இடையூறின்றி முடிய, கணபதியை நிறுத்தி வழிபடுவதைப் போன்றதாகும்..

Example

சிவ புராணம்

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!

புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!

ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!

தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!

சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,

சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை,

முந்தை வினை முழுதும் ஓய, உரைப்பன் யான்:

கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி,

எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி;

விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்!

எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர்,

பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;

புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி,

பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,

கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,

வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!

மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;

`உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற

மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள்

"ஐயா" என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே!

வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா!

பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி,

மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே!

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!

ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்

ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்,

போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்;

நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!

மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!

கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால் போலச்

சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று,

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த

மறைந்து இருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை,

அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி,

புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி,

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை

மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கு மனத்தால், விமலா! உனக்குக்

கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும்

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,

நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காஅட்டி,

நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு,

தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே!

மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே!

தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!

பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே!

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,

பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!

ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!

நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம்

சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே!

ஆதியனே! அந்தம், நடு, ஆகி, அல்லானே!

ஈர்த்து என்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே!

கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்

நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே!

போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே!

காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே!

ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்! நின்ற

தோற்றச் சுடர் ஒளி ஆய், சொல்லாத நுண் உணர்வு ஆய்,

மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம்

தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்

ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே!

வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப

ஆற்றேன்; "எம் ஐயா," "அரனே! ஓ!" என்று என்று

போற்றி, புகழ்ந்திருந்து, பொய் கெட்டு, மெய் ஆனார்

மீட்டு இங்கு வந்து, வினைப் பிறவி சாராமே,

கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே!

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே!

தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!

அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!' என்று,

சொல்லற்கு அரியானைச் சொல்ல

திருவடிக் கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,

பல்லோரும் ஏத்தப் பணிந்து.

நித்ய ராசி பலன்கள்