18 சித்தர்கள் ஒரு ஆழமான பார்வை -அகத்தியர்.

 

தேவர்கள் அனைவரும் இந்திரனின் முன்னால் போய் நின்றனர். தேவாதி தேவ! உலகில் அநியாயம் பெருத்து விட்டது. அரக்கர்களின் அட்டகாசத்தால், எவ்வுலகிலும் பக்தர்களால் யாகம், பூஜை, புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை. எங்களுடைய அவிர்ப்பாகம் கிடைக்காததால், நாங்கள் படும் வேதனைக்கு எல்லையில்லை. எங்கள் சக்தி குறைந்து, அசுரசக்தி வேகமாகத் தலைதூக்குகிறது. நல்லவர்கள் நிம்மதியின்றி உள்ளனர். கெட்டவர்களோ, அந்த ராட்சஷர்களுடன் கைகோர்த்து சுகபோக வாழ்வு நடத்துகின்றனர். கெட்டவர்களின் தரம் உயர்ந்தால், நல்லவர்களும் நம் மீதான நம்பிக்கையை இழந்தல்லவா விடுவார்கள். தேவர் தலைவனே! தாங்கள் தான் எங்களைக் காத்தருள வேண்டும், என்றனர். இந்திரன் தேவர்களின் குறையை கருணையுடன் கேட்டான். தேவர்களே! கலங்க வேண்டாம். தேவராயினும், மனிதராயினும், சிறு பூச்சி புழுவாயினும், அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக் கேற்ப பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். எனினும், இதுகண்டு நீங்கள் அஞ்சத் தேவையில்லை. அசுரர்களில் உயர்ந்தவனான தாரகன் தவவலிமை மிக்கவன். கடலுக்குள் மறைந்து வாழும் சக்தி படைத்தவன். பிரம்மாவின் அருளால் சாகாவரம் பெற்றவன். ஒரு கும்பத்தின் அளவே உருவமுடைய ஒருவரே அவனைக் கொல்ல முடியும். ஆனால், அவன் குறிப் பிட்டுள்ள அளவு உயரமுள்ளவர் எவரும் பூவுலகில் இல்லை. பிரம்மனால் கூட அப்படிப்பட்டவரைப் படைக்க முடியாது. இருப்பினும், பிறந்தவர் மாள்வது உறுதி. நீங்கள் அமைதி காக்க வேண்டும். நான் அவர்களை கடலுக்குள் வசிக்க இயலாத அளவுக்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். பின்னர், அவர்களது தொந்தரவு குறையும், என்றான்.

 

தேவர்கள் அரைகுறை மனதுடன் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பினர். இந்திரன் ஆழ்ந்து யோசித்தான். கடலை வற்றச்செய்வது என்பது எப்படி ஆகக்கூடிய காரியம். என்ன செய்வது? என குழம்பிப் போயிருந்த வேளையில், அதுவே சரி, என ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டான். அக்னிதேவனை தன் சபைக்கு வரச்செய்தான். அக்னி! நீ உடனே பூலோகத் துக்குச் செல். கடலுக்குள் அரக்கர்கள் ஒளிந்து கிடந்து நம் இனத்தாரை துன் புறுத்துகின்றனர். நீ கடலே வற்றும்படியாக வெப்பத்தை உமிழ். கடல் காய்ந்து போனதும், அரக்கர்கள் நம்மை துன்புறுத்தி விட்டு, ஓடி ஒளிய இடம் இல்லாமல் தவிப்பர். இதைப்பயன்படுத்தி அவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்வோம், என்றான். அக்னி சிரித்தான். இந்திரரே! தங்கள் யோசனை எனக்கு நகைப்பை வரவழைக்கிறது. அரக்கர்களை அழிப்பதே தேவர் களையும், பூலோக மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான். உலகில் கடல் இல்லை என்றால் மழை எப்படி பொழியும்? மழை இல்லை என்றால் ஆறுகள் எப்படி ஓடும்? ஆறுகள் இல்லையென்றால், நமக்கு அவிர்பாகம் தரும் யாகங்களை நடத்த தீர்த்தம் கூட இல்லாமல் போய் விடுமே. நீர் வாயுவை அழைத்துப் பேசும். ஒருவேளை வறண்ட காற்றால் அவன் கடலை வற்றச்செய்யக்கூடும், என்றான்.

 

இந்திரனுக்கு கோபம் வந்துவிட்டது. ஏ அக்னி! நான் இட்ட வேலையைச் செய்யும் வேலைக் காரன் நீ. தலைவனாகிய என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா?இந்த யோசனை யெல்லாம் இல்லாமலா நான் உன்னை கடலை வற்றச்செய்யும்படி பணிப்பேன். சொன்னதைச் செய்,என்றான்.அக்னியோ ஒரேயடியாக மறுத்து விட்டான். தாங்கள் என் எஜமானர் தான். எஜமானர் என்பதற்காக, அந்த எஜமானர் உள்ளிட்ட அத்தனை பேரையும் அழிக்கும் பாவத்தை நான் செய்ய மாட்டேன், எனச் சொல்லி விட்டு,கைகட்டி நின்றான். அடுத்து வாயு வரவழைக்கப் பட்டான். அவனிடமும் இந்திரன், கடல் சமாச்சாரம் பற்றிக் கூற, வாயுவும், அக்னி சொன்ன அதே பதிலையே சொன்னான். அக்னியும், வாயுவும் சொல்வதிலும் நியாயமிருக்குமோ என்னும் அளவுக்கு இந்திரனும் சிந்திக்க ஆரம்பித்து விட்டான். அத்திட்டத்தை கைவிட்டு, அவர்களை அனுப்பி விட்டான். ஆனால், சில நாட்களில் அரக்கர்களின் அட்டகாசம் அதிகரித்து, யாகங்கள் முழுமையாக நின்று போயின. யாக குண்டங்களில் அசுரர்கள் மாமிசத்தையும், ரத்த மழையையும் பொழிந்து தீட்டை உண்டாக்கினர். எந்த யாகமும் நடைபெறாமல் தேவர்கள் மெலிந்து போயினர். இப்போது, இந்திரனின் கோபம் அக்னி மற்றும் வாயுவின் மீதே திரும்பியது.

 

மீண்டும் அவர்களை வரவழைத்து, ஏ அக்னி! ஏ வாயு! அன்று நான் சொன்னதை நீங்கள் செய்யாமல் போனதால், அரக்கர்கள் தங்கள் அட்டகாசத்தை முடித்து விட்டு, கடலுக்குள் போய் ஒளிந்து கொள்கின்றனர். கடலுக்குள் மறைந்திருப்பவர்களை யாரால் கண்டுபிடிக்க இயலும்? அவர்களைக் கொல்வதென்பது எப்படி சாத்தியம்? என் சொல்லைக் கேளாததால் ஏற்பட்ட துன்பத்தின் பலனை அனுபவிக்கும் வகையில், நீங்கள் பூலோகத்தில் பிறந்து மனிதர்கள் படும் வேதனையை அனுபவிக்க வேண்டும், என சாபமிட்டான். அக்னியும், வாயுவும் பூலோகத்தில் பிறந்தனர். அக்னி மித்திரா என்ற பெயரிலும், வாயு வருணர் என்ற பெயரிலும் வாழ்ந்தனர். இச்சமயம், தேவலோக மங்கையான ஊர்வசி, தான் செய்த தவறால், இந்திரனின் சாபம் பெற்று பூலோகம் வந்தாள். அவள், ஒரு நீர்நிலையில் நீராடிக் கொண்டிருந்த போது, அவளை மித்திராவும், வருணனும் பார்த்தனர். அப்படி ஒரு பேரழகியை அவர்கள் கண்டதே இல்லை. அப்போது, அவர்களிடம் இருந்து வீரியம் வெளிப்பட்டது. மித்திரர் தன் கையில் இருந்தகும்பத்தில் வீரியத்தை இட்டார். வருணரோ, அதைத் தண்ணீரில் இட்டார். கும்பத்தில் இருந்த வீரியம் வளர்ந்து ஒரு குழந்தையாக மாறியது. அது சில நாட்களில் கும்பத்தில் இருந்து வெளிப்பட்டு உயிர் பெற்று நடமாடியது. அந்த உருவம் கமண்டலம், ஜடாமுடியுடன் தோற்றமளித்தது.

 

குடத்தில் இருந்து பிறந்ததால், அந்த குள்ள முனிவருக்கு கும்பமுனிவர் என்றும், குடமுனிவர் என்றும் தேவர்கள் அழைக்கலாயினர். அரக்கர்களைக் கொல்ல கும்ப அளவே உயரமுள்ள ஒரு முனிவர் பிறந்து விட்டதில் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இது ஒருபுறம் இருக்க, வாயுபகவான், தண்ணீரில் இட்ட வீரியத்தில் இருந்து வசிஷ்டர் பிறந்தார். இவர் அயோத்தியை நோக்கி போய் விட்டார். பிற்காலத்தில், இவர் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமருடன் சேவை செய்ய வேண்டியிருந்ததைக் கருத்தில் கொண்டு அங்கு சென்று விட்டார். கும்பமுனி உருவத்தில் தான் குள்ளம். ஆனால், அவரது சக்தியோ எல்லை மீறியதாக இருந்தது. அக்னியில் இருந்து பிறந்தவர் என்பதால், இவர் உடலில் வெப்பம் தகித்தது. தன் வெப்பத்தை தணிக்க தண்ணீரின் மீதே படுத்திருப்பார். அவரிடம், தேவர்கள் தங்கள் குறையை வெளியிட்டனர். சுவாமி! தங்களால் மட்டுமே அரக்கர்களை அழித்து எங்களைக் காக்க முடியும், என்றனர்.அகத்தியர் அவர்களுக்கு அருள் செய்வதாக வாக்களித்தார். தேவர்களைக்காக்கும் தனது கடமை தடங்கலின்றி நிறைவேற, தனக்கு வசதியான தண்ணீரிலேயே தவத்தை துவங்கினார். 12 ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீரில் படுத்த படியே இறைவனை தியானித்தார். இறைவன் அருளும் கிடைத்தது.

 

அரக்கர்களை சம்ஹாரம் செய்ய அவர்கள் மறைந்திருந்த கடலை நோக்கிச் சென்றார். தங்களை குள்ள முனிவர் ஒருவர் கொல்ல வந்துள்ளார் என்பதை அறிந்த அரக்கர்கள் தண்ணீரை விட்டு வெளியே வரவே இல்லை. ஆனால், அகத்தியர் விடுவாரா என்ன? தண்ணீர் முழுவதையும், தன் உள்ளங்கைக்குள் அடக்கி சித்து விளையாட்டு செய்தார். ஒட்டுமொத்த கடல் நீரும் அவர் கைக்குள் வந்தது. தீர்த்தம் குடிப்பது போல் குடித்து விட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், அசுரர்கள் மீது பாய்ந்தனர். இரு தரப்புக்கும் கடும் சண்டை நடந்தது. முடிவில், அரக்கர்கள் கொல்லப்பட்டனர். கடலையே சுருக்கி சாப்பிட்டவர் என்றால் சும்மாவா? மேலும், உலகையே காக்க வேண்டிய தேவர்களையே பாதுகாத்தவர் என்றால் அவரது சக்தி எத்தகையதாக இருக்கும்? அந்த மாமுனிவர், தான் வந்த வேலையை அத்துடன் முடித்துக் கொள்ள வில்லை. மகாவிஷ்ணு அப்போது மனித அவதாரமான ராமாவதாரம் எடுத்து இலங்கையிலே இருந்தார். ராமனின் மனைவியான சீதாவை, அந்நாட்டு அரக்க அரசனான ராவணன் தூக்கிச் சென்று விட்டான். அவளை மீட்பதற்காக பெரும்படையுடன் சென்றிருந்தும் கூட, அவரால் ராவணனை அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியவில்லை. அங்கு சென்ற அகத்தியர், ராமனிடம் சூரிய வழிபாடு செய்வதன் மூலம் பெரும் பலம் பெறலாம் எனக்கூறி, ஆதித்ய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகங்களைப் போதித்தார். மேலும் அவருக்கு சிவகீதையையும் கற்றுத் தந்தார்.

 

ராமபிரானின் இலங்கை வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் அகத்தியரும் ஒருவர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இமயமலைச் சாரலுக்கு வந்தார். அப்பகுதியில் தவமிருந்தார். ஒருமுறை, இந்திரத்துய்மன் என்ற அரசன் ஆண்ட நாட்டுக்குச் சென்றார். அவன் அகத்தியரின் மகிமை அறியாமல் உரிய மரியாதை கொடுக்கவில்லை. பெரியவர்களுக்கும், முனிவர்களுக்கும் மரியாதை கொடுக்காதவன் அரசாளத் தகுதியில்லாதவன் என்று கூறிய அவர், நீ யானையாகப் போ என சாபம் கொடுத்தார். அவன் வருந்தி அழுதான். கருணைக்கடலான அகத்தியர், மன்னா! நீ பக்தன் தான். யோகங்களில் தலை சிறந்தவன். ஆனால், மமதை என்னும் மதம் உன்னை ஆட்டிப் படைக்கிறது. அதன் காரணமாகவே, உன்னை மதம் பிடித்த யானையாக மாற்றி விட்டேன். இதுவும் நன்மைக்காகவே நடந்தது, என்றார். இதனால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும் சுவாமி? என் மனைவி, மக்கள் என் பிரிவால் துன்புறுவார்களே! என கேட்ட போது, மோட்சம் செல்லப் போகிறவன், சம்சார பந்தத்தை துறக்க வேண்டும். நீ சாட்சாத் மகாவிஷ்ணுவின் மூலம் சாபவிமோசனம் பெற்று வைகுண்டம் சேர்வாய். பிறப்பற்ற நிலை சித்திக்கும், என அருள் செய்தார்.

 

பிறவித்துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றால், யானையாகத் திரிவதில் தனக்கு சம்மதமே என்ற இந்திரத்துய்மன், காட்டில் அலைந்து திரிந்தான். பின்னர், முதலை ஒன்று அதன் காலைக் கவ்வ, அது ஆதிமூலமே என அலற, ஆதிமூலமாகிய மகாவிஷ்ணு அதனைக் காப்பாற்றி வைகுண்டம் சென்று சேர்த்தார். இப்படி ஆடம்பரத்தில் சிக்கித் திளைத்த அரசர்களுக்கு வைகுண்ட பிராப்தி அளிப்பவராகவும் அகத்தியர் விளங்கினார். சிவசிந்தனை தவிர வேறு ஏதும் அறியாத அகத்தியர், தவத்திலேயே ஈடுபட்டிருந்தார். இமயமலையில், பார்வதி, பரமேஸ்வரனுக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், உலகை சமநிலைப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பி வைத்தார் சிவபெருமான். அவர் அங்கிருந்து புறப்பட்டு வரும் வழயில், ஒரு மரத்தில் சிலர் தலைகீழாகத் தொங்குவதைப் பார்த்தார். அவர்கள் அகத்தியா! அகத்தியா! என கத்தினர். நீங்களெல்லாம் யார்? என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்? நான் தவவலிமை மிக்கவன். அக்னி- ஊர்வசி புத்திரன். என்னை வடபுலத்தோர் மட்டுமே அறிவார்கள். தென்திசையிலுள்ள உங்களுக்கு என் பெயர் எப்படி தெரிந்தது? என்னிலும் வலிமை மிக்கவர்களாகத் திகழ்கிறீர்களே! உங்கள் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன், என்ற அகத்தியர் அவர்களை தன்னையறியாமல் வணங்கினார். அகத்தியா! நீ சொன்ன தெல்லாம் சரிதான். நாங்கள் உன் முன்னோர்கள். உன்னைப் போலவே தவவாழ்வு வாழ்ந்தவர்கள். இருப்பினும், எங்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. சொர்க்கம் செல்ல துறவறம் மட்டுமே உதவாது. இல்லறத்துக்கு பிறகே துறவறம் பூண வேண்டும். யார் ஒருவருக்கு ஆண் குழந்தை இல்லையோ, அவர்கள் பிதுர்களின் உலகை அடைய முடியாது. ஆண் குழந்தையே கொள்ளி வைக்க தகுதியானவன். அதனால் எங்கள் அன்பு மகனே! நீ திருமணம் செய்து கொள். ஒரு மகனைப் பெறு. அவன் மூலமாக எங்களுக் குரிய தர்ப்பணம், சிரார்த்தம் செய்து எங்களுக்கு சொர்க்கப்பாதையைக் காட்டு. இல்லாவிட்டால், நாங்கள் இந்த மரத்திலேயே தொங்க வேண்டியது தான், எனக் கூறி வருந்தினர். உயரத்தில் குள்ளமான அவருக்கு யார் பெண் தருவார்கள்?

 

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதென்பார்கள் நம்மவர்கள். அதுபோல, அகத்தியர் உயரத்தில் மிகச்சிறியவர் என்றாலும், அவரது மகிமைகளை அறிந்த பெண்மணி ஒருத்தி, நிச்சயம் வாழ்க்கைப்பட்டே தீருவாள். தென்னகம் வரும் வழியில், அவர் விதர்ப்பம் என்ற நாட்டை அடைந்தார். அந்நாட்டு மன்னன் யாகம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். அதில் பங்கேற்க அகத்தியரை அவன் அழைத்துச் சென்றான். யாகத் தீ கொழுந்து விட்டெரிந்த போது, அதில் இருந்து ஒரு பெண்மணி வெளிப்பட்டாள். அப்போது அசரீரி தோன்றி, அகத்தியரே! நீர் இந்தப்பெண்ணை மணந்து கொள்ளும். இவளது பெயர் உலோபமுத்திரை, என்றது. அகத்தியரும் தெய்வ வாக்கிற்கேற்ப அவளது சம்மதத்தைக் கேட்டார். மாமுனிவரே! நான் இந்நாட்டில் தோன்றியதால், விதர்ப்ப தேசத்தரசரே என்தந்தையாகிறார். அவர் சம்மதம் தெரிவித்தால், நான் உங்கள் மனைவியாகிறேன், என்றாள். விதர்ப்ப அரசனும் சம்மதம் தெரிவித்தான். அப்போது உலோபமுத்திரை, அகத்தியரே! தாங்கள் என்னை மணம் முடிக்க வேண்டிய அவசியத்தை நான் தெரிந்து கொள்ளலாமா? என்றாள்.

 

லோபா! என் முன்னோர்கள் ஆண் குழந்தை இன்மையால், இறந்தும் திதி செய்ய நாதியின்றி தவிக்கின்றனர். அவர்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. நானும் துறவியாகி விட்டதால், அவர்களின் நிலைமை மோசமாகி விட்டது. அவர்களின் ஆத்ம சாந்திக்காக, நான் திருமணம் முடிக்க வேண்டியுள்ளது. பிதுர் தர்ப்பணம் செய்யாதவன் நரகை அடைவான் என்பதை நீ அறிவாய். அவர்களின் விருப்பப்படி, நான் இல்லறத்தில் ஈடுபட்டு, ஒரு மகனை பெற்று, அவன் மூலமாக தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றா விட்டால், நான் நரகத்தை அடைவேன் என சாபமும் இட்டுள்ளனர், என்றார். இதைக் கேட்ட விதர்ப்ப மன்னன்,அகத்தியரே! உமக்கு எம் மகளை தருவதற்கில்லை. அப்படி தர வேண்டுமானால், நான் உமக்கு சீதனம் தரமாட்டேன். நீரே நான் கேட்கும் பொருளை எனக்குத் தர வேண்டும், என சொல்லி விட்டான். இதென்ன சோதனை? துறவியிடம் ஏது செல்வம்? இந்த மன்னன் கேட்கும் தொகைக்கு எங்கு போவேன்? என எண்ணிக்கொண்டிருந்த போது, லோபமுத்திரையும், அகத்தியரே! என்ன யோசனை? இப்பூவுலகில் இனிய இல்லறம் நடத்த பொன்னும் பொருளும் தேவை என்பதை நீர் அறிய மாட்டீரா? எனவே மிகப்பெரிய மாளிகை கட்டும் அளவுக்கு இடமும், அதை நிரப்புமளவுக்கு செல்வமும் கொண்டு வந்து என்னை மணம் முடித்துக் கொள்ளும். இல்லாவிட்டால், நீர் நரகம்செல் வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொள்ளும், என்றார்.

 

ஒரு பெண் தன்னை மணம் முடிக்க சம்மதித்ததே பெரிய விஷயம் என்ற முறையில், அகத்தியர் பலநாட்டு மன்னர்களையும் சந்தித்தார். அவர்களிடம் பொருளை யாசித்து பெற்றார். லோபமுத்திரை கேட்ட அளவுக்கு பொன்னும், பொருளும் கிடைத்தது. அதை அவளிடம் தந்து அவளைத் திருமணம் செய்து ஒரு மகனைப் பெற்றார். முன்னோர்கள் சாபம் நீங்கி அவரை வாழ்த்தினர். தன் மனைவி லோபமுத்திரையிடம், அடங்காமல் பிரவாகம் எடுத்த நதிபோல், என்னை ஆட்டி வைத்தவளே! இனி, நீ எனக்கு அடங்கி நடக்க வேண்டும். எந்தச் செல்வம் உனக்கு அவசியப்பட்டதோ, அந்தச் செல்வம் உலகம் முழுமைக்கும் கிடைக்க வேண்டும். சிவபெருமான் என்னை தென்னகம் சென்று பூமியை சமப்படுத்தச் சொன்னதன் தாத்பர்யம் உனக்குத் தெரியுமா? இந்த உலகத்தை அவரது பாதத்தால் ஓர் அழுத்து அழுத்தினால், அது சரியாகி விடும்.ஏனெனில், இந்த பூமி அவருக்கே சொந்தமானது. ஆனால், உலகிலுள்ள உயிர்கள் சமநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் என்னை அனுப்பி வைத்தார். உலகம் செழிக்க தண்ணீர் தேவை. தண்ணீர் இருந்தால், உலகத்தின் எல்லாப்பகுதியும் தானாக செழித்து விடும். பயிர் பச்சைகள் வளரும். லோபா! நீ என் கமண்டலத்துக்குள் வந்து விடு, எனச்சொல்லி அவர் மீது தீர்த்தம் தெளித்தார். அவள் தண்ணீராக உருமாறி, கமண்டலத்தில் புகுந்தாள். அந்த கமண்டலத்துடன் அவர் குடகுமலையை அடைந்தார். மலையின் ஓரிடத்தில் தன் கமண்டலத்தை வைத்து விட்டு லிங்கபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு காகம் பறந்து வந்தது. கமண்டலத்தை தட்டி விட்டது. கமண்டலம் சரியவே, உள்ளிருந்த தண்ணீர் ஆறாய்பிரவாகம் எடுத்தது.

 

பெரிய நீர்வீழ்ச்சியாய் அது கொட்டியது. இதை எதிர்பாராத அகத்தியர் கமண்டலத்தில் கொட்டியது போக மீதி தண்ணீரை மீண்டும் பத்திரப் படுத்திக் கொண்டார். பிரவாகம்எடுத்த நதி கடல் போல் பெருகியதால் சிவசமுத்திரம் என சிவனின் பெயரால் அதை அழைத்தார். அது கா என்னும் சோலைகளுக்குள் விரிந்து பரவிச் சென்றதால், காவிரி என்று பெயர் வைத்தார். பின்னர், மீதி தண்ணீருடன் பொதிகை மலைக்கு வந்த அவர், லோபா! நீ நிரந்தரமானவள். என் முன்னோரின் சாபம் தீர்த்த நீ, குடகில் நதியாய் பிராவகம் எடுத்தது போல், இந்த பொதிகையிலும் நதியாகி உலகை செழிப்பாக்கு. செழிப் புள்ள உலகத்தில் வறியவர் இருக்கமாட்டார்கள். வறியவர்இல்லாத பூமியில் சமத்துவமான வாழ்வு கிடைக்கும், என்று கூறி, கமண்டலத்தில் இருந்த மீதி நீரை, பொதிகையின் உச்சத்தில் இருந்த சிகரத்தில் கொட்டினார். அது பளபளவென மின்னியபடியே பாணம் போல வேகமாகப் பாய்ந்து ஒரு அருவியை உருவாக்கியது. அதற்கு பாண தீர்த்தம் என பெயர் வைத்தார். அந்த அருவி ஓரிடத்தில் தேங்கி, நதியாகப் பாய்ந்தது. அப்போது, ஓரிடத்தில் சிவபார்வதி தரிசனம் கிடைத்தது. அதைக் கண்ட லாபமுத்திரை ஆனந்தமயமாகி மற் றொரு அருவியாய் வீழ்ந்தாள். அதற்கு கல்யாண தீர்த்தம் என பெயர் சூட்டினார் அகத்தியர். மீண்டும் ஓரிடத்தில் பக்தர்கள் நீராடி மகிழ ஒரு நீர்வீழ்ச்சியாய் மாறி, தன் கணவரின் பெயரால் அகத்தியர் தீர்த்தம் என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தாள். இன்றும் அதில் பக்தர்கள் நீராடி மகிழ்கின்றனர். தாமிரபரணி என்னும் பெயர் பெற்று அப்பகுதியை வளப்படுத்தினாள். பின்னர் அகத்தியர் பொதிகையில் தங்கி தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். உலகை சமநிலையாக்கிய மகிழ்ச்சியில் அங்கிருந்து மலைப்பாதையில் திருவனந்தபுரத்தை அடைந்தார். அங்கே அவர் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. ஒரு சிலர் அகத்தியர் கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

 

*தியானச் செய்யுள்.*

************************

 

ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே

சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே

கடலுண்ட காருண்யரே

கும்பமுனி குருவே சரணம் சரணம்

 

*காலம்.*

**********

 

அகத்தியர் முனிவர் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 4 யுகம் 48 நாள் ஆகும்.

Posted in மட்றவை and tagged .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *